TamilanSite Group
Get Best Only
Saturday, 11 November 2017
Sunday, 5 November 2017
An Adventurists's Journey to பரதன் தாங்கல்: பாகம் 38
பாகம் 38
வினய் கல்லால் வேகமாவே இரண்டுமுறை தட்டினான்.
பெரியவர் அவன் மேலிருந்து கீழிறங்கி, இந்தக் கல்லப் புடி. நான் சொன்னேன் இல்ல அந்தக் கல்லை சுத்திலும் இருக்குற சிமெண்ட சொரண்டி எடு’
‘இவ்ளோ நேரம் என்ன பாத்துட்டு இருந்தீங்க? திடீர்னு வெளிச்சம் வேற’
‘விடிவெள்ளி பூமிக்கு வந்திருக்கு. அதான் அவ்ளோ வெளிச்சம்’. கூறிவிட்டு கழிவறையை விட்டு வெளியேறினார்.
அவன் திகைப்புற்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
மேலே நின்றுகொண்டிருந்த இருவரும் கீழே வந்து எதிரில் இருந்த கேட்டின் ஓரத்தில் மழைநீர் படாதவாறு நின்றுகொண்டிருந்தனர். கிரில் கேட்டின் வழியே வெளியே பார்த்தார். மழையோடு விடியல் வெளிச்சம் பெரியவர் கண்ணுக்கு தெரிந்தது. விடியலின் களிப்பு இசை வடிவில் வெளிப்பட்டது.
--------------- ----------------------- --------------------- ----------------------- ---------------------- -----------
உள்பக்கம் இருந்தவனும் வினய்யோடு சேர்ந்து அந்தக் கல்லின் சுற்றிலும் இருந்த சிமெண்டை சுரண்டிக்கொண்டிருந்தான். ஆனால் கல்லால் கொஞ்சம் கூட சிமெண்டை சுரண்ட முடியவில்லை. வெளிப்புறம் இருந்தது போலல்லாமல் இந்தப்பக்கம் சிமெண்ட் உறுதியாக வழவப்பாக இருந்தது. வேலை வேகமாக நடந்து கொண்டிருந்தது. மழை நின்றபாடில்லை. உள்ளே இருப்பவர்களின் ஆர்ப்பாட்ட ஆட்ட பாட்டமும் நின்றபாடில்லை. இந்தப் பக்க நாற்காலியில் அமர்ந்திருப்பவனுக்கு எந்தச் சப்தமும் கேட்டுவிடக் கூடாது என்பதால் அனைவரும் பாட்டுப் பாடுவதை நிறுத்தவில்லை. காவலாட்கள் இவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது போலும் என்கிற நினைப்பில் பார்த்துக்கொண்டிருந்தனர். வினய்யிடம் நீளமான கத்தி இருந்ததால் வேகமாக சுரண்ட முடிந்தது. உள்பக்கம் இருந்தவன் கல்லை வைத்துக்கொண்டு வினய்க்கு முடிந்தவரை உதவிக்கொண்டிருந்தான். வினய்க்கு எட்டிய வரை சிமெண்டை சுரண்டியிருந்தான். இன்னும் சுரண்ட வேண்டியிருந்தது. ஆகவே கத்தியை கழிவறையின் தூக்கிப் போட்டான். அது கல்லால் செய்யப்பட்டிருந்த ஜன்னலின் வழியே சரியாக உள்ளே சென்று விழுந்தது. உள்ளே இருப்பவன் அதை எடுத்துப் பார்த்தான். வினய் சுரண்டி எடுத்துக் கொண்டியிருந்த கல்லைத் தட்டினான். உள்ளே இருப்பவன் புரிந்துகொண்டு மீதமிருந்த சிமெண்டை சுரண்டினான். சிமெண்ட் முழுவதுமாக சுரண்டி எடுக்கப்பட்டது. அந்தக் கல் அப்படியே தரையோடு தரையாக இறங்கியது. வினய் அந்தக் கல்லை மெதுவாக உள்பக்கம் தள்ளினான். உள்ளே இருந்தவனும் உதவி செய்தான். ஒரு ஆள் செல்வதற்கு ஏற்றவாறு அந்த ஓட்டை இருந்தது. வினய் படுத்தவாறு உள்ளே நுழைந்தான். உள்ளே இருந்தவன் வினய்யை கட்டித் தழுவினான்.
‘இதுவரைக்கும் யாரும் இவனுங்க கண்ணுல படாம இங்க வந்ததில்ல. நீ உள்ளயே வந்துட்ட. நாங்க எல்லாரும் இங்க இருந்து தப்பிச்சி போவோமா இல்லையானு எனக்கு தெரியல. ஆனா எல்லார் முகத்துலயும் பழைய சந்தோஷத்த பாக்க வச்சிட்ட. எனக்கு அது போதும்’. மறுபடி கட்டித்தழுவினார்.
வினய் மெதுவாக கழிவறையின் வாசலுக்கு அருகில் சென்று மெதுவாக வெளியே எட்டிப்பார்த்தான். ஆட்டமும் பாட்டமும் அள்வில்லாததாக இருந்தது. கிரில் கேட்டுக்கு வெளியில் பார்த்தான். நாற்காலியில் ஒருவன் அமர்ந்துகொண்டு பெய்யும் மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். உள்ளே மாட்டி வைக்கப்பட்டிருந்த தீப்பந்தங்கள் காற்றில் அலைந்து கொண்டிருந்தன. மெதுவாக உள்ளே நுழைந்தான். ஆடிக்க்கொண்டிருக்கும் கூட்டத்தில் ரத்தனைத் தேடினான். கூட்டத்தினருடன் சேராமல் அங்கே இருந்த அமர்வு கல்லின் மீது சோகமாக அமர்ந்திருந்தான். வினய் அவன் அருகில் சென்று தோளில் கை வைத்தான். அவன் திரும்பினான். தீப்பந்த வெளிச்சம் வினய் முதுகில் பட்டுக்கொண்டிருந்தது. முகம் தெரியுமாறு திரும்பி நின்றான். ரத்தன் ஆச்சர்யம் விலகாமல் எழுந்தான். வினய்யைக் கட்டிக்கொண்டான். வினய்யும் அவனை கழுத்தோடு சேர்த்து அணைத்துக்கொண்டான். சில வினாடிகள் நீடித்தது. விலகினர்.
Thursday, 2 November 2017
An Adventurists's Journey to பரதன் தாங்கல்: பாகம் 37
பெரியவர் வெளியில் பார்த்து, ‘தம்பி?’
வெளியில் இருக்கும் வினய் பேசினால் மேலே நின்றுகொண்டிருப்பவர்களுக்கு கேட்டுவிடுமென்பதால் கல்லாலேயே இரண்டுமுறை தட்டினான்.
‘நீங்க இப்ப புதுசா வந்தானே ஒரு பையன் அவனோட ப்ரண்ட் தான?’
“டொக்..டொக்..”
‘அவன் சொன்னான் தம்பி நீங்க ரெண்டு பேரும் வருவீங்கன்னு. தம்பி, எப்டி வந்தீங்க?’
“.............”
‘ஓ.. மன்னிச்சிருப்பா. எப்டி சொல்ல முடியும். சந்தோஷத்துல என்ன பேசறன்னு எனக்கே தெரியல. என்ன பண்ணப்போற?’
வினய் சுவற்றில் பெரிதாக கட்டமாக வரைந்தான்.
‘புரியல தம்பி’
வினய் சுவற்றில் மூன்றுமுறை தட்டி, கட்டம் வரைந்து, பிறகு ஒரு வட்டம் வரைந்தான்.
பெரியவர் சிறிது யோசித்து, ‘ஓ.. சுவத்துல ஓட்டை போடப் போறியா?"
“டொக்..டொக்..”
‘உனக்கு வலதுபக்கத்துல நீ தட்ற கல்லுல இருந்து மூணாவது கல்லு, அப்டியே கீழ நாலாவது கல்லு. அத பேத்து எடுத்தா சரியா இருக்கும். ஆனா இதுக்கு எங்களால உதவி பண்ண முடியாது. இந்தப் பக்கம் சொரண்டுனா கண்டிப்பா சத்தம் கேட்கும். வாசல்லயே ஒருத்தன் உட்காந்திருக்கான். அவனுக்கு கேட்டுடும்’
“டொக்..டொக்..”
வினய் தன் இடுப்பில் வைத்திருந்த கத்தியை வெளியில் எடுத்தான். உறையில் இருந்து கத்தியை உருவினான். கத்தியை திருப்பி மழுங்கிய பக்கத்தைக் கொண்டு, அவர் சொல்லிய கல்லைச் சுற்றிலும் இருக்கும் சிமெண்டை சுரண்ட எத்தனித்தான். வானத்திலிருந்து ஒரு மழைத்துளி வினய்யின் கையில் வந்து விழுந்தது. நிமிர்ந்தவனின் நெற்றியில் அடுத்த துளி விழுந்தது. வானத்தின் ஓரத்தில் இடி இடிக்க ஆரம்பித்தது. எங்கிருந்தோ வந்த மின்னல், வினய்க்கு சற்று தொலைவில் இருந்த மரத்தில் விழுந்தது. ஆனால் இடியின் சத்தமோ, வெப்பத்தின் தாக்கமோ இல்லை. வினய், பெரியவர், மேலே இருந்த இருவர் அனைவரும் திகைப்போடு சில வினாடிகள் மின்னல் தாக்கி எரிந்து கொண்டிருக்கும் மரத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். தொப்பென்று மழை கொட்டத் தொடங்கியது.
Sunday, 29 October 2017
An Adventurists's Journey to பரதன் தாங்கல்: பாகம் 36
பாகம் 36
ரத்தன் தொடர்ந்தான். ‘அவங்களுக்கு நாம இங்க இருக்குறத எப்டியாவது தெரியப்படுத்தணும், இவனுங்களுக்கு தெரியாம’
அனைவரும் யோசிக்கலாயினர். அதிலிருக்கும் ஒருவன் கட்டியிருந்த வேட்டியின் நுனியைப் பிடித்து திருகியவாறே யோசித்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த பெரியவர்க்கு ஒரு யோசனை தோன்றியது. அவர் ரத்தனையும், அங்கே இருந்த இன்னொருத்தனையும் கூட்டிக்கொண்டுச் சென்று கழிவறையில் இருந்த ஜன்னலைக் காட்டிக் கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் பெரியவரைப் பார்த்து சூப்பர் என்பதுபோல் விரல் காட்டினர்.
இருவரின் வேட்டியிலிருந்து நார் போன்று இரண்டு கீற்றுகள் கிழிக்கப்பட்டன. அவற்றின் முனைகள் முடிச்சிடப்பட்டன. ஒருவன் அந்தக் கழிவறை ஜன்னலின் அருகில் நிற்க வைக்கப்பட்டான். முடிச்சிடப்பட்ட அந்த வேட்டி கீற்றின் ஒருமுனை ஜன்னலின் அந்தப் பக்கம் போடப்பட்டது. இன்னொரு முனையை இந்தப் பக்கம் நின்றிருந்தவன் பிடித்து இடப்பக்கம், வலப்பக்கமாக ஆட்டிக்கொண்டிருந்தான்.
வெளியே –
நிலவெளிச்சம் சுணக்கம் காட்டத் தொடங்கியது. வினய்யின் வேண்டுதல் வீண் போகவில்லை. பெரிய மேகக்கூட்டம் நிலவை நோக்கி வந்துகொண்டிருந்தது. வினய் தயாரானான். வெளிச்சம் மங்கி மறைந்தது. தரை தெரியவில்லை. வினய் காட்டைவிட்டு மெதுவாக சமவெளிக்குள் காலடி எடுத்து வைத்தான். கோட்டைமேல் நின்றிருந்தவனின் பார்வை இவன் மேல் விழவில்லை. குனிந்தவாறு அந்தக் கோட்டையினை நோக்கி ஓடிச்சென்று கோட்டையின் சுவற்றில் சாய்ந்து நின்றுகொண்டான். யாரும் பார்க்கவில்லை. வலதுபக்கமாக மெதுவாக நடந்தான். கிரில் கதவுகளுக்கு அந்தபக்கம் நாற்காலியில் ஒருவன் அமர்ந்திருந்தான். இந்தப்பக்கம் செல்வது ஆபத்து என்று கருதி திரும்பி வலதுபுறமாக நடந்தான். சுவற்றைக் கடந்து வந்தபோது குதிரைகளை கட்டி வைக்கும் கொட்டகை இருந்தது. மதிற்சுவற்றை ஒட்டி கட்டப்பட்டிருந்தது. சுற்றிக்கொண்டு வெளிக்கதவுக்கு நேர்பின்னே பின்பக்கம் இருந்த சுவற்றை அடைந்தான். அங்கே வீசிய துர்நாற்றம் அவனை திக்குமுக்காட வைத்தது. மூத்திர நாற்றம் அவனை மயக்கமுறும் அளவிற்கு வீசியது. மூக்கை மூடியவாறு அந்த இடத்தைப் பார்த்தவாறு நின்றான். இருட்டில் சர்யாக தெரியவில்லை. கைக்கடிகாரத்தைக் கழட்டினான். அதிலிருக்கும் பட்டனை அழுத்தி லைட்டை ஆன் செய்தான். விளக்கு மஞ்சளாக எரிந்தது. மங்கலாகவும்தான். துர்நாற்றத்தைப் பொறுத்துகொண்டு சுவற்றில் வெளிச்சத்தை பரவவிட்டான். கற்களாலும், சிமெண்டாலும் கட்டப்பட்டிருந்தது. கோட்டையின் மற்ற இடத்திலுள்ள சுவர்களில் அந்தக் கால கற்களும், பிடிமானத்திற்கு அவர்களால் தயாரிக்கப்பட்டதும் பூசப்பட்டதுமாயிருக்க இங்கு மட்டும் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதுவும் பூசப்பட்டு வெகுநாட்கள் ஆகியிருந்ததுபோல் உலுத்துப்போயிருந்தது. கீழே சிமெண்ட் தரை மிகவும் சறுவலாக போடப்பட்டிருந்தது. மனிதக் கழிவுகள் சிதறிக் கிடந்தன.
வெளிச்சத்தை மேல்நோக்கிக் காட்டினான். வெள்ளையாக ஏதோ ஒன்று அந்தப்பக்கமும், இந்தப்பக்கமும் ஆடிக்கொண்டிருந்தது. வினய் மெதுவாக அதைப் பிடிக்க அந்தக் கீற்று இறுக்கமாகியது. உள்ளே இருப்பவன் இறுக்கத்தை உணர்ந்து இழுக்க முழு கீற்றும் உள்ளே வந்து விழுந்தது. வினய் திகைப்புற்று நின்னிருந்தான். உள்ளே இருந்தவன் மெதுவாக கழிவறையின் வாசல் அருகே சென்று அந்தப் பெரிவரிடம் ஜாடையாக உள்ளே வருமாறு அழைத்தான். வந்தவரிடம் கீற்றை வெளியிலிருந்து யாரோ இழுத்தாகக் கூறினான். அந்தப் பெரியவர் ஜன்னலின் அருகாமையில் வந்து நின்று தலையைத் திருப்பி காதை வைத்து கேட்டார். எந்த சப்தமும் இல்லை. பின்வந்து கீழே இருந்த கல்லை எடுத்து சுவற்றில் இரண்டுமுறை தட்டினார். சத்தம் கேட்ட வினய் சிறிது யோசித்துவிட்டு கையால் சுவற்றில் தட்ட எந்த ஓசையும் எழவில்லை. உடனே ஒரு கல்லை எடுத்து அதிகம் சப்தம் வராதபடி சுவற்றை தட்டினான். உள்ளே நிலவிய நிசப்தம் ஓசையை சரியாக இவர்களை கேட்க வைத்தது. இருவரும் அளவில்லாத மகிழ்ச்சியடைந்தனர். கரையை மோதும் அலையாக ஒருவரையொருவர் கட்டிக்கொண்டனர்
Wednesday, 25 October 2017
An Adventurists's Journey to பரதன் தாங்கல்: பாகம் 35
பாகம் 35
வினய் அந்த மலையைச் சுற்றிவந்து மலையின் பின்பக்கத்திற்கு வந்திருந்தான். வெட்டவெளியாக இருந்தது. சிறிது தூரத்திற்கு சிறு சிறு செடிகளும் பாறைகளும் இருந்தன. எதிர்திசையில் காடு இருந்தது. இவன் நின்றிருந்த இடத்திலிருந்து அந்த காட்டைநோக்கி ஒத்தையடிப்பாதை ஒன்று சென்றது. குதிரை வண்டி செல்லும் அளவிற்கு சரியாக இருந்தது. அடிக்கடி உபயோகப்பட்டிருப்பதன் அறிகுறி தெரிந்தது. வினய் அந்தப் பாதையினூடே நடந்துசென்றான். அந்தக் காட்டினை நெருங்கியிருந்தான். அவர்களின் ரகசிய வழியில் சென்றுகொண்டிருந்தமையால் கவனமாகவே நடந்தான். எதிர்பார்த்த வகையில் ஆட்கள் அமர்ந்திருந்தனர், காட்டின் அந்த ஓரத்தில். தரையில் செருகி வைக்கப்பட்டிருந்த தீப்பந்தங்கள் அவர்களை அடையாளப்படுத்தின. வினய் என்ன செய்வதென்று புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தான். இவர்களை கடந்தாலொழிய காட்டினைக் கடந்து செல்ல முடியாது. பாதையை விட்டு காட்டினுள் நுழைந்தான். சிறிது தூரம் வழியை விட்டு உள்ளாக நடந்தான். அவர்களுக்கு தெரியாதவாறு நடந்து சென்றான், மிக மெதுவாக. மரங்கள் மிகவும் வலிமையாக இருப்பது தொட்டுப் பார்த்ததிலிருந்து தெரிந்தது வினய்க்கு. காட்டினூடே நடந்து காட்டைக் கடந்தான், கிட்டத்தட்ட. காட்டின் விளிம்பில் நின்றுகொண்டு அமர்ந்திருந்த அவர்களைப் பார்த்தான். தொலைவில் தீப்பந்தத்தின் வெளிச்சம் தெரிந்தது. இவனுக்கு எதிரிலும் வெளிச்சம் தெரிந்தது. வினய் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியில் உறைந்தான். அந்தக் கால கோட்டை போன்று ஒன்று இவன் முன்பு இருந்தது. இவன் தேடி வந்தது கிடைத்ததாக எண்ணி மகிழ்ச்சி பெருமூச்சு விட்டான். பின்னேயிருந்த மலையை ஒட்டி இருந்தது. பெரியது என்று சொல்ல முடியாத அளவில் இருந்தது. பைனாகுலரின் வழியே நோட்டமிட்டபோது கோட்டைக்குமேல் ஒருவன் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. அந்தப்பக்கமும், இந்தப்பக்கமும் பார்த்தவாறு நடந்துகொண்டிருந்தான். நிலவின் வெளிச்சம் படர ஆரம்பித்திருந்தது. வெளியில் சென்றால் கண்டிப்பாக அவன் கண்ணில் பட்டுவிடும் ஆபத்து இருப்பதை உணர்ந்திருந்தான், வினய். இவன் கண்ணில் படாதவாறு செல்வது கடினம். யோசிக்கலானான். நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். நிலா மேகங்களின் உரசலில் மெருகேறி மிளிர்ந்து கொண்டிருந்தது. மேகங்கள் நிலவின் வெளிச்சத்தை மறைக்க போராடி தோற்றுக்கொண்டிருந்தன. மேகங்களின் வெற்றிக்காக வேண்டிக்கொண்டு காத்திருந்தான் வினய்.
கோட்டையின் உள்ளே -
ரத்தனும், அந்தப் பெரியவரும் , இன்னும் சிலரும் அமர்ந்திருந்தனர். மற்றவர்கள் களைப்பில் மூலைக்கொருவராய் படுத்திருந்தனர். ரத்தன் அந்தக் காவலாட்கள் வினய்யைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்ததை இவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
அந்தப் பெரியவர், ‘நீ சொல்றதெல்லாம் சரிப்பா. அவன் தப்பிச்சிருந்தாலும் சரியா இந்த இடத்துக்கு வர்றதெல்லாம் நடக்காதது. இங்க இருக்குற நெறய உன் ப்ரண்ட்ஸ் மாதிரி வந்தவங்கதான். இடத்தையே கண்டுபிடிச்சாலும், இங்க வந்து திரும்பிப் போறது நடக்காதது’
ரத்தன், ‘அவங்கள பத்தி உங்களுக்குத் தெரியாது. இதுவரைக்கும் இவனுங்கள்ல யாரையாவது ஒருத்தரையாவது உங்க ஆளுங்க கொன்னிருங்காங்களா? ஆனா என் ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரை கொன்னிருங்கானுங்க. அதான் அவனுங்க. இதுவரைக்கும் இவனுங்களை எதிர்த்து நிக்கிற மாதிரி யாரையும் இவனுங்க பார்த்ததில்ல. அதான் இவனுங்க. எனக்காக வரலைன்னாலும், உங்களுக்காக வரலைன்னாலும், என் ஃப்ரெண்டுக்கு தேவையான ஒன்னு இங்க இருக்கு. அந்த ஒன்னுக்கு எதாவதுனா இங்க ஒருத்தன் உடம்புலயும் தலை இருக்காது’
‘.........’
Saturday, 21 October 2017
An Adventurists's Journey to பரதன் தாங்கல்: பாகம் 34
பாகம் 34
ரத்தனும் கூட்டத்தினரும் வந்த வேலையை முடித்திருந்தனர். அவர்கள் கூறியபடி எல்லா மரங்களையும் வெட்டியிருந்தனர். மரங்களை இரண்டு, இரண்டு துண்டுகளாக்கி இருந்தனர். இலைகளை கழித்து கும்பலாக்கியிருந்தனர். இப்போது ஆளுக்கொரு மரத்துண்டுகளை உருட்டியவாறு அவ்விடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அந்த மூவரும் முன்னே செல்ல இருவர் பின்னே வர அனைவரும் மரத்துண்டுகளை உருட்டிக்கொண்டு சென்றனர். எதிரில் வண்டியில் சென்ற நால்வரும் வந்தனர். வந்திறங்கி இம்மூவரிடமும் ஏதோ சொன்னார்கள். மரத்துண்டை உருட்டியவாறு ரத்தன் அவர்களைக் கடந்தான். அப்போது ஒருவன்,
“அவனுங்க இங்க வந்தாலும் வரலாம். கவனமா பாத்துக்குங்க. ராத்திரி அதிகமா ஆளப்போடுங்க.......”
என்று சொல்லிக்கொண்டிருந்தான்.
ரத்தனுக்கு யாரைப்பற்றி பேசுகிறார்கள் என்பது புலப்பட்டது. வினய்யையும், சுனிலையும் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை; இவர்கள் கையில் அவர்கள் அகப்படவில்லை; இவர்களால் அவர்களை பிடிக்க முடியவில்லை. இன்றிரவே நம்மைக் காப்பாற்ற வந்தாலும் வரலாம் என்று களிப்படைந்தான். வானம் லேசாக இருட்ட ஆரம்பித்தது. மரத்துண்டுகளை வேகமாக உருட்டியவாறு அனைவரும் சென்றனர். இவர்களை அடைத்து வைத்திருக்கும் அந்த இடத்தில் இருந்த குடோன் போன்ற இடத்துக்கு முன்னால் அந்த மரத்துண்டுகளை குவித்து வைத்தனர். அந்த மூன்று பேரும் மூன்று சாவிகளைக் கொண்டு அந்த குடோனின் கதவைத் திறந்தனர். அந்த குடோன் அந்த முன்பக்க கதவிற்கு இடதுபக்கமாக இருந்தது. அது அங்கே இருந்த அறையை சுற்றிக்கொண்டு சென்றது. இவர்கள் இரண்டு, இரண்டு பேராக மரத்துண்டுகளை தூக்கிகொண்டு சென்றனர். அது அந்த அறையையே சுற்றிக்கொண்டு பின்பக்கம் குடோன் போன்று இருந்த ஒரு இடத்துக்குக் கூட்டிச் சென்றது.
அங்கே சில ஆட்கள் மரத்துண்டுகளை நான்கு, ஐந்தாக பிளக்கும் இயந்திரத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர். இவர்கள் எல்லா மரத்துண்டுகளையும் தூக்கிக்கொண்டு வந்து ஒரு இடத்தில் அடுக்கி வைத்தனர். வைத்துவிட்டு வெளியில் சென்று நின்றனர். அந்த மூவரும் இவர்களை அடைத்து வைக்கும் இடத்துக்கு செல்லும் கதவைத் திறந்தனர். அதில் ஒருவன் உள்ளே சென்று நின்றுகொண்டான். ஒவ்வொருவறாக உள்ளே செல்ல அவன் எண்ணிக்கொண்டான். அனைவரும் உள்ளே வந்து அந்த அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டனர். அவன் வெளியில் இருக்கும் இருவரிடமும் கணக்கு சரியாக இருக்கிறது என்பதுபோல் தலையாட்டினான். உடனே அவனும் வெளியே சென்றுகொள்ள பூட்டுகள் பூட்டப்பட்டன. உள்ளே இருந்த காவலாட்களிடம் நடந்தவற்றைக் கூறி கவனமாக இருக்கும்படி கூறிவிட்டு, அந்த குடோனுக்கு செல்லும் வழியை திறந்துகொண்டு அந்தப்பக்கம் சென்றனர். மூன்று காவலாட்களும் ரத்தனை ஒருமுறை ஏளனமாக பார்த்துவிட்டு, ஒருவன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துகொள்ள மற்ற இருவரும் மேலே சென்று நின்று காட்டை நோட்டமிட்டனர். காட்டின் மூலையில் நரியின் மரண ஓலம் கேட்டது.
Friday, 20 October 2017
An Adventurists's Journey to பரதன் தாங்கல்: பாகம் 33
பாகம் 33
சுனில், ‘அதோ பார்த்தியா வினய், இந்த மலையோரமா போற வழி, அது நேரா போகுது. இந்தப் பக்கம் பாரு, அந்த மரங்களுக்கு கீழ ஒரு பெரிய பாதை போகுது பாரு. அதுதான் ரேஷ்மாவையும், ரத்தனையும் வச்சிருக்குற இடத்துக்கு போற வழியா இருக்கணும்’
‘உனக்கு எப்டி தெரியும்?’
‘நான் இந்த இடத்துல உட்கார்ந்துகிட்டு இருந்தப்போ ரெண்டு பேரு குதிரைவண்டில இந்தப் பக்கமா போனாங்க. நாம அடிச்சிப் போட்ட ஆளுங்கள தேடிப் போயிருப்பானகனு தீர்மானிச்சேன். எப்டியும் திரும்பி வருவாங்கனு தெரியும். அதனால மலை மேல ஏறி உட்கார்ந்துகிட்டேன். திரும்பி வந்த அவங்க இந்த வழியாத்தான் போனாங்க. அவங்கள ஃபாலோ பண்ணி போலாம்னு கீழ இறங்கி வந்தப்போதான் உன்ன பார்த்தேன். நீயும் அவங்க பின்னாடிதான் வந்தியா?’
‘இல்ல, அவங்கள்ல ஒருத்தன் அந்த ஆத்துவழியில செத்துக்கெடந்தான்ல அவந்தான் இங்க வர வழி சொன்னான். மலைய சுத்தி போனா இடம் வரும்னு சொன்னான். ஆனா நான் இன்னிக்கு முழுக்க நடந்து இதே மாதிரி மூணு மலைய பார்த்துட்டு வந்துட்டேன். ஆனா இந்த வழி நான் போகும்போது நான் பாக்கல’
சுனில் காட்டிய பாதை வினய் சென்ற பாதையிலிருந்து பிரிந்து வலப்பக்கமாக சென்றது. வினய்க்கு குழப்பமாக இருந்தது. இவன் சென்றபோது அப்படி ஒரு பாதையே இல்லை. ஒரே ஒரு பாதைதான் சென்றது. வினய் இன்னும் கொஞ்சம் உயரம் ஏறினான். காட்டில் இருந்த மரங்களை விட உயரமான இடத்தில் சென்று நின்றனர். வினய் கையில் வைத்திருந்த பைனாகுலரால் நேராக பார்த்தான். ரொம்ப தூரத்தில் லேசாக ஒரு மலை தெரிந்தது. அப்படியே இடப்பக்கமாக திரும்பினான். அங்கே ஒரு மலை தெரிந்தது. இன்னும் கொஞ்சம் இடதுபுறம் திரும்பினான். அங்கேயும் ஒரு மலை தெரிந்தது. பைனாகுலரை கீழிறக்கினான். பாதை தெரியாமல் காட்டை சுற்றி சுற்றி வந்திருப்பது அவனுக்கு புரிந்தது. மறுபடி பைனாகுலரை எடுத்து சுனில் காட்டிய பாதையைப் பார்த்தான். அதுவும் ஒரு காட்டுக்குள் சென்றது. அந்தக் காட்டைத் தாண்டி ஒரு மலை தெரிந்தது. ஆனால் மிக தூரமாக இல்லை. மலையை விட்டு கீழிறங்கினார்கள். மலையைச் சுற்றிக்கொண்டு சென்ற பாதையில் சென்றனர். வலப்பக்கம் அந்த மரங்கள், வேலி, அதில் படர்ந்து செல்லும் கொடிகள் மட்டுமே இருந்தன. மேலிருந்து இவர்கள் பார்த்த பாதை இல்லை. ஆச்சர்யமாக இருந்தது இருவருக்கும். நின்று கொண்டிருந்த பாதையைப் பார்த்தனர். எந்தத் தடமும் இல்லை. உற்றுநோக்கியபடியே பின்னோக்கிச் சென்றனர். சற்று தூரத்தில் ஏதோ வண்டிச் சக்கரத்தின் தடம் லேசாகத் தெரிந்தது. அங்கேயே நின்றனர். பாதையின் முன்னும் பின்னும் பார்த்தனர். வண்டிச்சக்கரத்தின் தடம் அதோடு முடிந்து போயிருந்தது. நிமிர்ந்தனர். எதிரிலிருந்த வேலியைப் பார்த்தனர். வேலியைப் போல் அல்லாமல் இயற்கையாக அமைந்தது போலிருந்தது. வேலியில் கை வைத்தனர். லேசாக ஆடியது. ஆறடி உயரம் இருந்த அந்த வேலியில் அந்த இடம் மட்டும் வித்தியசாமாக கொடிகள் இடைவெளி விட்டு வளர்ந்திருந்தது. கொடிகளை விலக்கி பார்த்தனர். மரக்கட்டைகளால் செய்த கதவு தெரிந்தது. வினய்யும் சுனிலும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். இருவரும் ஒரே நேரத்தில் ஓங்கி காலால் அந்தக் கதவை உதைத்தனர். அது இரண்டு அடி தள்ளிச் சென்று விழுந்தது. பாதை கண்ணுக்குத் தெரிந்தது. இடப்பக்கம் சந்திரனும், வலப்பக்கம் சூரியனும் ஒரே அளவில் பிரகாசித்தன.
வினய், ‘இதுதான் வழி சுனில். இப்பவே போய் அவங்க ரெண்டு பேரையும் காப்பாத்தணும்’
‘அது நம்மளால முடியாது. அவங்ககிட்ட ஆயுதம் இருக்கு. ஆளுங்களும் இருக்காங்க. வழி தெரிஞ்சிடிச்சி இல்ல. வா போய் ஊர்க்காரங்கள கூட்டிக்கிட்டு வருவோம்’
‘நம்மளையும் பைத்தியக்காரங்கனு சொல்வாங்க’
‘ஏன்?’
‘இத்தன வருஷமா பேய பாத்து பயந்து கிடக்குறவங்க கிட்ட போய் அது பேய் இல்ல, மனுஷங்கதான்னு சொன்னா நம்புவாங்களா? அப்படியே நம்பினாலும் நமக்காக அவங்க உயிர பணயம் வச்சி வருவாங்களா? கிழடுகட்டைங்க செத்த உடனே தூக்கிப்போட்டு போகத்தான் அவங்களாம் இந்த ஊர்லயே இருக்காங்க. அது மட்டுமில்லாம இந்நேரம் எல்லாரும் அவங்கவங்க வீட்டுக்குள்ள போயிருப்பாங்க. நாம போய் கதவு தட்னாலும் திறக்க மாட்டாங்க’
‘போலிஸ் கிட்ட போய்டுவோம்’
‘இதுல போலிஸ்க்கும் சம்மந்தம் இருந்தா என்ன பண்றது? இவ்ளோ தூரம் நாம கஷ்டப்பட்டது வீணாய்டும். அதனால இத நாமலேதான் முடிக்கணும்’
‘எப்டி?’
வினய் சிறிது நேரம் யோசித்தான். அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அதை சுனிலிடம் கூறினான். சுனிலும் சிறிது யோசித்துவிட்டு சரி என்பது போல் தலையசைத்தான்.
வினய், ‘சுனில் இந்தப் பாதையிலயே போனா ஒரு மேடு வரும் அது ரோட்ல போய் ஜாயின்ட் ஆகும்னு நினைக்கிறேன். நீ அந்த ரோட்டைப் புடிச்சி நடந்து டவுனுக்கு போய், எடிட்டர்க்கு இங்க நடந்ததையெல்லாம் சொல்லு. நம்ம ஆபிஸ்ல இருக்குறவங்கள இங்க அனுப்ப சொல்லு. காலைல நாங்க வரலன்னா, நீயும் மத்தவங்களும் சேர்ந்து ஊர்க்காரங்க கிட்ட சொல்லி அவங்கள கூட்டி வந்துடுங்க. நெறய பேர் சொன்னா நம்புறதுக்கு வாய்ப்பு இருக்கு’
கூறிவிட்டு வினய் தன் மொபைல் போனை அவனிடம் கொடுத்தான்.
‘உனக்கு ஒண்ணும் ஆகாது வினய்’. சுனில் வினய்யின் தோள் மீது கை வைத்தான். ஒருவரையொருவர் பார்த்துகொண்டனர். கட்டிப்பிடித்துக் கொண்டனர். ஒருசில நொடிகள் அப்படியே இருந்தனர். விலகினர். சுனில் புறப்பட்டான். வினய் அந்தப் பாதையைப் பார்த்தவாறு நின்றான்.
-
பாகம் 39 Suspense Thriller and Horror Story - Tamil வினய் கல்...
-
பாகம் 38 Suspense Thriller and Horror Story - Tamil வினய் கல்ல...
-
பாகம் 34 Suspense Thriller and Horror Story - Tamil ரத்தனும் க...






